புதுடெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 கைதிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து போயினர். இதனால் கைதிகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.டெல்லியை அடுத்துள்ள திகார் சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த இருவாரங்களில் மட்டும் 5 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துள்ளனர். இந்த சிறையில் ரிங்கு ஜுனேஷா (வயது 27) என்பவர் விசாணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் வழக்கில் ஜாமின் பெற்று வெளியே செல்ல இருந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் திடீரென அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் மாலை 5 மணிக்கு சிசிக்சை பலன் இன்றி இறந்தார். இது போல், கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 5 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக டிஐஜி அலோக் வர்மா தெரிவித்துள்ளார். ஆனால், சிறை நிர்வாகம் எதையோ மறைக்கிறது, கைதிகள் சாவில் மர்மம் உள்ளது என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த சம்பவம், திகார் சிறை கைதிகள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.