இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான லார்ட்ஸ் ஆடுகளத்தில் ரகானேவின் முதல் சதத்தால் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 290 என்ற கவுரவமான ஸ்கோரை எடுத்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று மாலை துவங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து, இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கூறியது. பசுமையாகத் தெரிந்த ஆடுகளம் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே சொதப்பினர். துவக்க ஜோடியாக முரளி விஜய், ஷிகர் தவான் களமிறங்கினர்.
தவான் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேம்ஸ் ஆன்டர்சன் பந்து வீச்சில் பேலன்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முரளிவிஜயும் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிளங்கெட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். புஜாரா, கோஹ்லி ஆகியோர் சிறிது நேரம் நின்று விளையானாலும், அதிக அளவில் ரன்களை குவிக்கவில்லை. புஜாரா 28 ரன்களிலும், கோஹ்லி 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தோனி, ஜடேஜா, பின்னி ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறிக் கொண்டிருக்க ஒரு முனையில் நங்கூரம் போல் நின்று ரன்களைக் குவித்தார் ரகானே.
147 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணிக்கு ரகானே கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார்.8வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார் புவனேஸ்வர் குமார். இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சமாளித்து ரன்களைக் குவித்தனர். இதனால், இந்தியா 200 ரன்களைத் தாண்டியது. இந்நிலையில் 36 ரன்கள் எடுத்திருந்த புவனேஸ்வர் குமார் பிராட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடி சதம் அடித்த ரகானே 103 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆண்டன்சனின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இங்கிலாந்தில் ரகானே அடிக்கும் முதல் சதம் இது. ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் என்ற வலுவான நிலையில் இந்தியா உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய பேட்ஸ்மேன் ரவீந்திர ஜடேஜாவை தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், நெருக்கடியான நிலையில் நேற்று சிறப்பாக பந்து வீசினார். அவர் நேற்று 4 விக்கெட்களை சாய்த்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தார்.