கமுதி அருகே இன்று பயங்கரம்: தலை துண்டித்து விவசாயி கொலை: ஆம்புலன்சை மறித்து மக்கள் போராட்டம்
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள அய்யனார்குளத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (51), விவசாயி. இவர் இன்று காலை 5 மணிக்கு தனது தோட்டத்துக்கு நடந்து சென்றார். கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் சென்ற போது, திடீரென வந்த மர்ம நபர்கள் அவரை அருகே உள்ள தோட்டத்துக்கு தூக்கி சென்றனர். அவரை சரமாரி வெட்டியதோடு தலையையும் துண்டித்தனர். பின்னர் உடலை மட்டும் பம்பு செட் தொட்டியில் போட்டுவிட்டு தலையோடு கும்பல் அங்கிருந்து தப்பியது.இன்று காலை தோட்டத்துக்குச் சென்றவர்கள் பம்புசெட் தொட்டியில் உடல் கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொட்டிக்கு அருகே கிடந்த வேட்டி, சட்டையை வைத்து சண்முகம் என்பதை அடையாளம் கண்டுபிடித்தனர். கமுதி ஏ.எஸ்.பி. விக்ரமன் கொலை நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். விவசாயி சண்முகம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
பிரேதப் பரிசோதனைக்காக உடலை போலீசார் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், தலையைத் தேடி கண்டுபிடிக்காமல் உடலை எடுத்துச் செல்லக்கூடாது எனக் கூறி கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், உடலை எடுக்க வந்த ஆம்புலன்ஸ் முன் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் உடலை அந்த இடத்திலேயே போட்டனர்.பின்னர் கமுதி போலீசார் ஏராளமானோர் அப்பகுதியில் உள்ள தோட்டங்கள், கிணறுகளில் துண்டிக்கப்பட்ட சண்முகத்தின் தலை கிடக்கிறதா? என தேடி வருகின்றனர். கொலை நடந்த பகுதி விருதுநகர் மாவட்ட எல்லை என்பதால் கமுதி போலீசார் கொடுத்த தகவலின் பேரில் விருதுநகர் மாவட்ட போலீசாரும் தலையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.