கிருஷ்ணகிரியில் கடன் வழங்க லஞ்சம்: வங்கி மேலாளர் கைது
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரியில் கடன் வழங்க லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளரை சிபிஐ லஞ்சஒழிப்பு பிரிவினர் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (40). சமையல் மாஸ்டர். இவர், கேட்டரிங் நடத்தி வருகிறார். புதிய சமையல் பாத்திரங்கள் வாங்குவதற்காக ரூ.3 லட்சம் கடனுதவி கோரி, சந்தூரிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த மேலாளர் ஈரண்ணா (30) என்பவர் ரூ.60 ஆயிரம் கொடுத்தால் கடனுக்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இது பற்றி சென்னையில் உள்ள மத்திய புலனாய்வுத்துறை லஞ்சஒழிப்பு பிரிவில் பாலாஜி புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை பாலாஜியிடம் கொடுத்தனுப்பினர். அதனை பெற்றுக் கொண்டு நேற்று மாலை வங்கிக்கு சென்ற பாலாஜி, அங்கிருந்த மேலாளரிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் தலைமையிலான குழுவினர் மேலாளரை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.