கூடுவாஞ்சேரி: வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி, காரணைபுதுச்சேரி, அருங்கால், பெருமாட்டுநல்லூர் கிராமங்களையொட்டி அரசு காப்புக்காடு உள்ளது. இந்நிலையில், காரணைப்புதுச்சேரி, சங்கோதியம்மன் கோயில் தெருவை சேர்ந்த புஷ்பராஜ் என்பவர், வீட்டின் அருகிலுள்ள காப்பு காட்டிற்கு மலம் கழிக்க நேற்று முன்தினம் சென்றார். அப்போது காட்டில் முட்புதர்களை உரசியபடி சிறுத்தை வந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் கிராம மக்களிடம் கூறியுள்ளார்.இதேபோல், அருங்கால் கிராமத்தில் உள்ள காப்புக் காட்டின் அருகே ஒருவரது மாந்தோப்பு உள்ளது. அங்கு மான் ஒன்றை சிறுத்தை வேட்டையாடி இழுத்து சென்ற கால் தடயமும் பதிவாகியுள்ளது. சில தினங்களாக பெய்து வரும் மழையால் சிறுத்தையின் கால் தடயங்கள் அழிந்துள்ளது. மேலும் ஒரு மாட்டின் தலையை கடித்து துண்டாக்கி வேட்டையாடப் பட்டு இறந்து கிடந்தது.
இது அழுகிய நிலையில் உள்ளதால் 3 நாட்கள் ஆகியிருக்கலாம்.இது குறித்து அருங்கால் பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டு சென்றனர். ஆனால் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கவோ, கண்காணிப்பு கேமரா பொருத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், காரணைபுதுச்சேரியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. அதற்கான அடையாளமாக அருங்கால் பகுதியில் மானை கடித்து இழுத்து சென்ற தடம் உள்ளது. அருங்கால் கிராமத்தில் தாயும், குட்டியும் வந்து சென்றது போன்று சிறிய மற்றும் பெரிய தடம் உள்ளது.
இதற்கு முன்பு செங்கல்பட்டு மற்றும் நெடுங்குன்றம் அடுத்த சதானந்தபுரம், ஆலப்பாக்கம் வனக்காடுகளில் சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்த வனத்துறையினர், அங்கு கூண்டு மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். தற்போது இங்கும் நடமாட்டம் உள்ளதால் பீதியில் உள்ளோம்‘ என்றனர்.ஊரப்பாக்கம்- நல்லம்பாக்கம் சாலை காட்டுப்பகுதி என்பதால் இவ்வழியாக பயணம் செய்யும் 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சிறுத்தை நடமாடுவதை தீவிரமாக கண்காணித்து அதை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.