பொன்னேரி: மீஞ்சூர் அருகே குறித்த நேரத்தில் அரசு பஸ்கள் வராததால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மீஞ்சூர் அடுத்த மேட்டுப்பாளையத்தை சுற்றி வன்னிப்பாக்கம், முறிச்சம்பேடு, இளவம்பேடு, கம்மவார்பாளையம், சிறுவாக்கம், அனுப்பம்பட்டு, சானார்பாளையம், கங்காடிகுப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மாணவ, மாணவிகள் மேடப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பொன்னேரி, மீஞ்சூரில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இங்கு வரும் பஸ்கள் குறித்த நேரத்தில் வருவதில்லை. இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இது குறித்து பொன்னேரி பணிமனை மேலாளர் சுகுமாரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று காலையிலும் வழக்கம் போல பஸ் தாமதமாக வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலை 8 மணியளவில் மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் பொன்னேரி பணிமனை மேலாளர் சுகுமாரன் சம்பவ இடத்துக்கு சென்றனர். ‘குறித்த நேரத்தில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்ததன் பேரில், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.