டெல்லியில் அரசு வீட்டை காலி செய்ய கெஜ்ரிவாலுக்கு 3 வார கெடு
புதுடெல்லி: டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒதுக்கப்பட்ட அரசு வீட்டை காலி செய்ய 3 வார கெடு விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி அமைத்தது. லோக்பால் பிரச்னை காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். முன்னதாக, அவர் குடியிருக்க டெல்லியில் திலக் சாலையில் உள்ள அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. அதில் தனது குடும்பத்தினருடன் கெஜ்ரிவால் குடியேறினார். இதற்கிடையில் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பிப்ரவரி இறுதி வரை இலவசமாக அரசு வீட்டில் தங்க சலுகை வழங்கப்பட்டது.
அதன்பின்னர் மாதம் ரூ.80 ஆயிரம் வாடகை தர உத்தரவிடப்பட்டது. கடந்த 5 மாதமாக அவர் இந்த வாடகையை டெல்லி நகர்புற வளர்ச்சி துறைக்கு செலுத்தி வந்தார். இந்நிலையில், திலக் சாலை அரசு இல்லத்தை காலி செய்யுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை அவருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கால கெடுவுக்குள் அரசு வீட்டை காலி செய்ய அரவிந்த் கெஜ்ரிவாலும் முடிவு செய்திருப்பதாக ஆம்ஆத்மி கட்சி வட்டரங்கள் தெரிவித்தன. கெஜ்ரிவாலின் மனைவிக்கு கவுசாம்பி பகுதியில் வருவாய் துறையினர் வீடு ஒதுக்கியுள்ளனர். அந்த வீட்டில் கெஜ்ரிவால், குடியேற இருப்பதாக தெரிகிறது. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லியில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்ய வரும் அக்டோபர் மாதம் வரை கெடு விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.