சினிமாவாகும் புராண கதைகள்
சென்னை: ரஜினி, மம்மூட்டி நடித்த படம் ‘தளபதி. மணிரத்னம் இயக்கி இருந்தார். இக்கதை மகாபாரதத்தில் இடம்பெறும் துரியோதனன், கர்ணன் நட்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. அதேபோல் மணிரத்னம் இயக்கிய ‘ராவணன் என்ற படம் கம்பராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்தி சென்றதை தழுவி உருவாக்கப்பட்டது என்று கோலிவுட்டில் பேச்சு உண்டு. இந்த பாணியில் மற்றொரு படம் உருவாகிறது. இம்முறையும் மகாபாரதத்தின் சம்பவம்தான் கதைக்கரு. இப்படத்துக்கு ‘சிகண்டி என பெயரிடப்பட்டிருக்கிறது. ‘என்னமோ நடக்குது என்ற சஸ்பென்ஸ் படத்தை இயக்கிய ராஜபாண்டி இயக்குகிறார். இதுபற்றி டைரக்டர் கூறும்போது, ‘மகாபாரதத்தில் பீஷ்மரை வீழ்த்த அர்ஜுனன் பயன்படுத்திய கதாபாத்திரம்தான் சிகண்டி. இப்படம் புராண கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவில்லை. ஆனால் 2 முக்கிய கதாபாத்திரங்கள் அதாவது அர்ஜுனன், சிகண்டியின் குணம் படைத்த 2 கதாபாத்திரங்களை சுற்றி கதை பின்னப்பட்டிருக்கிறது. ஸ்கிரிப்ட் பணிகள் நிறைவடைந்திருக்கிறது. சிகண்டி கதாபாத்திரத்தில் விஜய் வசந்த் நடிக்கிறார். மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். ஆகஸ்ட் மாதம் இறுதியில் ஷூட்டிங் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது என்றார்.