அறந்தாங்கி: புதுக்கோட்டை அருகே பைக்கில் 10.5 கிலோ தங்க கட்டிகளை கடத்திவந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.ராமநாதபுரத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் வழியாக தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மத்திய வருவாய் புலனாய்வு துறை போலீசார் இன்று அதிகாலை 3 மணி அளவில் கோட்டைப்பட்டினம் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே 2 வாலிபர்கள் வந்த ஒரு பைக்கை மறித்து சோதனையிட்டனர். அவர்களது பேக்கில் ஏராளமான தங்கக்கட்டிகள் இருந்தன.இருவரும் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்தவர்கள், ராமநாதபுரத்திலிருந்து தங்க கட்டிகளை கடத்திவந்ததும், மொத்த எடை 10.5 கிலோ என்றும் தெரியவந்தது. தங்க கட்டிகளுக்கு உரிய எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. நகை மதிப்பீட்டாளர் மூலம் தங்கக்கட்டிகளின் மதிப்பு முழுமையாக கணக்கிடப்பட்டுவருகிறது. இருவரையும் கைதுசெய்த போலீசார் அவர்களை அறந்தாங்கி மத்திய சுங்க இலாகா கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று அவர்கள் தங்கத்தை எங்கிருந்து, யாருக்காக கடத்திச்சென்றனர் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கருவேப்பிலான் கேட் அருகே பஸ்சில் கடத்திவந்த சுமார் 7 கிலோ தங்கம், கட்டுமாவடி அருகே பஸ்சில் கடத்திவந்த 12 கிலோ தங்கம் சமீபத்தில் பிடிபட்டது. இன்று 3வது முறையாக கிலோ கணக்கில் கடத்திவந்த தங்கம் பிடிப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து அறந்தாங்கி வழியாக தங்கம் கடத்துவது தொடர்ந்து வருவதால் தங்கம் கடத்தும் கும்பல் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்களா என பிடிபட்ட 2 பேரிடமும் தீவிர விசாரணை நடந்துவருகிறது. தொடரும் கடத்தல்கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்படும் பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் சிக்குவதில்லை. கோட்டைப்பட்டினம் சம்பவத்தில் 2 பேர் சிக்கியுள்ளதால், இவர்களிடம் இருந்து தங்கம் கடத்தும் கும்பல் குறித்த தகவல்களைப் பெற முடியும் என்று போலீசார் கருதுகின்றனர். புதுகை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் உள்ளன. இலங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து கடல்மார்க்கமாக படகுகள் மூலம் தங்கம் கடத்திவந்து, பின்னர் வாகனங்களில் இவற்றை கடத்தி செல்வது தொடர்ந்து நடக்கிறது. இதுபோன்ற கடத்தல் பின்னணியில், கும்பல் தலைவர்கள் சிக்குவதில்லை. பறிமுதல் செய்யப்படும் தங்கமும் திரும்பப் பெறப்படுவதில்லை. சமீபத்தில் கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாடுகின்றனரா என்பதைக் கண்டறிய ஆபரேஷன் ‘ஹம்லா’ நடத்தப்பட்டது. அப்போது, இதுபோன்று தங்கம் பிடிபடவில்லை. தற்போது அதிகாரிகள் உஷாராக இருக்க மாட்டார்கள் என்று கருதி தங்கம் கடத்திவரப்பட்டுள்ளது. ஆனால், ரகசிய தகவல் கசிந்து, 2 பேர் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.