இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தீவிரவாதிகளை கண்டதும் சுடுவதற்கு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஆப்கன் எல்லையில் உள்ள வடக்கு வசிரிஸ்தான் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அவர்கள் அங்கு பல இடங்களில் தீவிரவாத முகாம்களை அமைத்து, பல ஆண்டுகளாக பாகிஸ்தானிலும்ஆப்கானிஸ்தானிலும் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் அரசு பல முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், தீவிரவாதிகளின் நிபந்தனைகளை ஏற்க முடியாமல் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதற்கிடையே, இந்த தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்து வந்தது.
இந்நிலையில், இந்தியாவில் பிரதமராக மோடி பதவியேற்ற விழாவில் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். இது விரவாதிகளுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து, கராச்சி, பெஷாவர் விமானநிலையங்களில் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தினர். இதில் பலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 15ம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம், வசிரிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால், அம்மாகாண மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே, பாகிஸ் தான் நாடாளுமன்றத்தில் புதிய தீவிரவாத தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு சட்டம்2014 என்ற பெயரில் நாடாளுமன்றத்தின் மேல்சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை, கீழ் சபையில் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலிகான் சார்பாக நேற்று அறிவியல், தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜாகித் ஹமீது கொண்டு வந்தார்.
இந்த சட்டம் வாக்கெடுப்பில் நிறைவேறியது. புதிய சட்டத்தின்படி, தீவிரவாதிகளை கண்டதும் சுடுவதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கு சாதாரண ஜூனியர் அதிகாரிகளுக்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. மேலும், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வாரன்ட் இல்லாமல் எந்த இடத்தையும் சோதனையிடுவதற்கும், கைதிகளை 60 நாட்கள் வரை ரிமாண்டில் வைக்கவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் 2 ஆண்டுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானில் உள்ள மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.