அண்டார்டிகா மலைக்கு இந்திய விஞ்ஞானி பெயர்
வாஷிங்டன்:அண்டார்டிகாவில் உள்ள மலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயரை சூட்டி அமெரிக்கா கவுரவித்துள்ளது.அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா மாகாணத்தில் அமைந்திருக்கும் பல்கலைக்கழகத்தில் மரபியல், செல் உயிரியல் மற்றும் மேம்பாடு ஆகிய துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் இந்தியர் அகோரி சின்கா. இவர் அண்டார்டிகாவில் உள்ள மலையில் வாழும் உயிரினங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். இவரது பணியை கவுரவிக்கும் வகையில் இவர் ஆய்வு செய்த அண்டார்டிகா மலைக்கு ‘செயின்ட் சின்கா’ என்று அமெரிக்கா பெயர் சூட்டி கவுரவித்துள்ளது.
அண்டார்டிகா, மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு பனியால் சூழ்ந்திருக்கும் மிகப்பெரிய துருவ பிரதேசமாகும். இங்கு உலகம் முழுவதும் இருந்து விஞ்ஞானிகள் வந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.பனிப்பாறைகளுக்கு மத்தியில் வசிக்கும் சீல், திமிங்கலம், பறவைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யும் குழுவில் அகோரி சின்காவும் உறுப்பினராக இருந்தார். இந்த குழு அமெரிக்காவின் பனிப்பாறைகளை வெட்டும் கடற்படை கப்பலில் சென்று அங்கு தங்கியிருந்து 1972 முதல் 1974 வரை இங்கு ஆய்வுகளை நடத்தியது.இந்த மலை அண்டார்டிகாவின் தென்கிழக்கே மிகவும் உள்பகுதியில் அமைந்துள்ளது. இதுகுறித்து அகோரி சின்கா கூறுகையில், ‘யாராவது இந்த மலையை பார்க்க விரும்பினால் கூகுள் மேப் இணையதளத்தில் பார்க்க முடியும்’ என்று தெரிவித்தார்.