லேட்டாக வந்த 40 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய அமைச்சர்
புதுடெல்லி:டெல்லியில் உள்ள செய்தி ஒலிபரப்பு அமைச்சக அலுவலகத்துக்கு தாமதமாக வேலைக்கு வந்த 40 ஊழியர்களை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் சாதாரண விடுப்பில் வீட்டுக்கு திரும்பி போகுமாறு உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் நேற்று காலை 9 மணிக்கு டெல்லியில் உள்ள தனது அமைச்சக அலுவலகத்துக்கு திடீர் விசிட் செய்தார். 9.30 மணிக்கு அமைச்சகத்தை சுற்றி பார்த்தார். அப்போது பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. சில செக்ஷன்கள் ஒட்டு மொத்தமாக வெறிச்சோடி கிடந்தன. காலை 9 மணிக்கு வரவேண்டிய ஊழியர்கள் 10 மணிக்கே அலுவலகம் வந்தனர். ஒரு சிலர் அப்போதும் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் தாமதமாக வருபவர்கள் அனைவரையும் தன்னை வந்து பார்க்குமாறு உயர் அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து தாமதமாக பணிக்கு வந்த 40 பேர் அமைச்சரை பார்ப்பதற்காக அவரது அறைக்கு வெளியே வரிசையாக நின்றனர். அவர்களை ஒவ்வொருவராக வரவழைத்து சாதாரண விடுப்பில் வீட்டுக்கு செல்லுமாறு ஜாவேத்கர் உத்தரவிட்டார். இனிமேலும் தாமதமாக வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார். இதை தொடர்ந்து அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு அலுவலகம் வரவேண்டும். 5.30 மணி வரை இருக்கையில் அமர்ந்து பணி செய்ய வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட பிரிவு கண்காணிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஒரே சமயத்தில் 40 பேரை வீட்டுக்கு அனுப்பிய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.