தொழிலதிபர் பாலியல் தொந்தரவு நடிகை பிரீத்தி ஜின்டா போலீசில் வாக்குமூலம் கிரிக்கெட் மைதானத்தில் நடித்து காட்டினார்
மும்பை: தொழிலதிபர் நெஸ்வாடியா தன்னிடம் தவறாக நடந்துகொண்டது தொடர்பாக போலீசில் 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார் பிரீத்தி ஜின்டா. அப்போது கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சம்பவத்தை நடித்து காட்டினார்.பாலிவுட் நடிகை பிரீத்தி ஜின்டா மும்பை போலீசில் ஒரு புகார் அளித்தார். சமீபத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தபோது மாஜி காதலரான தொழிலதிபர் நெஸ் வாடியா தன்னை தரக்குறைவாக திட்டியதாகவும் இதனால் தனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். காதல் முறிவுக்கு பிறகு தொடர்ந்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறி இருந்தார் பிரீத்தி. இதை நெஸ் வாடியா மறுத்திருந்தார்.இந்நிலையில் பிரீத்தி அமெரிக்கா சென்றார். அவர் கடந்த சனிக்கிழமை மும்பை திரும்பினார். போலீசார் நேற்று நேரில் அவரிடம் வாக்குமூலம் பெறச் சென்றனர். வீட்டில் வாக்குமூலம் அளிப்பதைவிட சம்பவம் நடந்த ஸ்டேடியத்தில் அளிக்கும்படி பிரீத்தியிடம் கேட்டனர். அவரும் ஒப்புக்கொண்டு வான்கடே ஸ்டேடியத்துக்கு நேற்று மாலை 6.30 மணிக்கு வந்தார். அங்கு தான் அமர்ந்திருந்த கேலரி அருகில் நின்றபடி சம்பவம் நடந்தது எப்படி என்பதை விளக்கி வாக்கு மூலம் அளித்தார். அதை போலீசார் பதிவு செய்துகொண்டனர். இரவு 8.30 மணி அளவில் அங்கிருந்து பிரீத்தி புறப்பட்டு சென்றார்.இந்த வழக்கில் பிரீத்தியின் புகார் சம்பந்தமாக நேரடி சாட்சியாக மும்பை தொழில் அதிபர் டேனிஷ் மெர்சன்ட் சேர்க்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக ஏற்கனவே 8 சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர். பிரீத்தியின் வாக்குமூலமும், சாட்சிகளின் வாக்குமூலமும் ஒப்பிட்டு இந்த சம்பவத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.