குலசேகரம்: குமரி மாவட்டம், குலசேகரத்தை அடுத்துள்ள வெண்டலியோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜிஷ் (27). கொத்தனார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வேளாங்கண்ணி அருகேயுள்ள கீவரூர் பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றார். அங்கு நண்பர்கள் மூலம் வேலையை மாற்றி பெயின்டிங் வேலைக்கு சென்றுள்ளார். தன்னுடன் வேலை செய்த நெருங்கிய நண்பர் வீட்டிற்கு ரெஜிஸ் அடிக்கடி செல்வது வழக்கம். அந்த நண்பரின் அக்கா ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால், அவரது 2 குழந்தைகளையும் கவனிப்பதற்காக அவரது கணவர் ராமலிங்கத்துக்கு மற்றொரு அக்கா லதா என்ற சந்திரகலாவை(28) திருமணம் செய்து கொடுத்திருந்தனர். இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளார். ராமலிங்கத்திற்கும், சந்திரகலாவுக்கும் இடையே 20 வயது வித்தியாசம். இதை பயன்படுத்தி சந்திரகலாவுக்கு ரெஜிஸ் தூண்டில் போட்டுள்ளார். அவரது காதல் வலையில் சந்திரகலா விழுந்தார்.
இது ராமலிங்கத்திற்கு தெரிந்து கண்டித்துள்ளார். கணவர் பேச்சை சந்திரகலா கேட்கவில்லை. எனவே, ராமலிங்கம் போலீசில் புகார் செய்தார். ரெஜிசையும், சந்திரகலாவையும் போலீசார் அழைத்து விசாரித்த போது, ரெஜிசுடன்தான் வாழ்வேன் என சந்திரகலா உறுதியாக இருந்துள்ளார். போலீசார் எதுவும் செய்ய முடியாமல் விட்டுவிட்டனர். கடந்த 2012 பிப்.22ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதன்பின், சந்திரகலாவிடம் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம், 7 பவுன் நகைகளை ரெஜிஸ் வாங்கி செலவழித்தார். பின்னர், சொந்த ஊரான குலசேகரத்துக்கு வந்த அவர் திரும்பி செல்லவில்லை. இங்கு ரெஜிசின் அண்ணன் மீதான வழக்கில் ஆஜராகும் வக்கீல் வீட்டிற்கு ரெஜிஷ் பெயின்ட் அடிக்க சென்றுள்ளார். அப்போது, இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் அவரது மகள் நிஷாவை காதலிக்க தொடங்கினர். சில மாதங்களில் நிஷாவை அழைத்துசென்று கோயிலில் திருமணம் செய்தார்.
இதற்கிடையே, ரெஜிசை தேடி சந்திரகலா குமரி மாவட்டத்துக்கு வந்தார். இங்கு வந்த பிறகு ரெஜிஸ் கொடுத்த முகவரி, பெயர் அனைத்தும் பொய் என தெரிய வந்தது. அப்போதுதான் ரெஜிஸ் தன்னை ஏமாற்றியதை உணர்ந்தார். உடனே சந்திரகலா ஊருக்கு திரும்பி, பழைய கணவர் ராமலிங்கத்தை அணுகி மன்னிப்பு கேட்டார். தன்னிடம் நகை பணத்தை வாங்கிக் கொண்டு ரெஜிஸ் ஏமாற்றியதையும் கூறினார். இருவரும் ரெஜிசை தேடினர். இந்நிலையில், ரெஜிஸ் வீட்டை நேற்று கண்டுபிடித்து அங்கு சென்றபோது அவர் இருவரையும் துரத்தியுள்ளார். சந்திரகலா உடனே அந்த வீட்டின் முன் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அப்பகுதி மக்கள் அங்கு கூடி விசாரித்தனர். சந்திரகலா ரெஜிசுடன் திருமணம் செய்து கொண்டபோது எடுத்த புகைப்படம், திருமணம் செய்த சான்றிதழ், இருவரும் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட புகைப்படம் ஆகியவற்றை காண்பித்தார். இதையடுத்து, குலசேகரம் காவல்நிலையத்திற்கு தகவல் சென்று போலீசார் விசாரித்தனர். ரெஜிஸ் உண்மைகளை ஒப்புக்கொண்டதோடு, பணத்தையும், நகையையும் திருப்பி தருவதாக கூறினார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.