திரைப்படத் துறைக்கு தனி மேம்பாட்டு கழகம் திரையுலகினர் கோரிக்கை
சென்னை: திரைப்பட துறையினருக்கு தனி மேம்பாட்டு கழகம் அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் தமிழ் திரைப்பட துறையினர் மனு அளித்தனர்.சென்னை, தலைமை செயலகத்தில், திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் (பெப்சி) அமீர், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் மற்றும் நிர்வாகிகள் நேற்று செய்தித்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் அமீர் அளித்த பேட்டி:தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் கடந்த நவம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தபோது, திரைப்பட துறையினருக்கு தனி மேம்பாட்டு கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மக்களவை தேர்தல் முடிந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதல்வர் உறுதி அளித்திருந்தார். தற்போது தேர்தல் முடிந்து, சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத் தொடரில் திரைப்பட துறையினருக்கு தனி மேம்பாட்டு கழகம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அமைச்சரும், எங்களது கோரிக்கை பற்றி முதல்வரிடம் எடுத்துக் கூறி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.