போலி பாஸ்போர்ட் கும்பலுடன் ஜவுளி வியாபாரிகளுக்கு தொடர்பு? உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை
செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் மலேசியா, மொரிசியஸ், சிங்கப்பூர், கனடா, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்து வருகின்றனர். வியாபாரிகள் அதிக நாட்கள் வெளி நாடுகளில் தங்கினால் பாஸ்போர்ட்டில் சிகப்பு முத்திரை குத்தி, சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள். சிகப்பு முத்திரை உள்ள பாஸ்போர்ட் மூலம் மீண்டும் வெளி நாடுகளுக்கு செல்ல முடியாது.ஆனால் சின்னாளபட்டியை சேர்ந்த வியாபாரிகள் பாஸ்போர்ட் தவறி விட்டது என்று விளம்பரம் செய்து, புதிய பாஸ்போர்ட் பெற்று கொள்வார்கள். மேலும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்று வியாபாரம் செய்து வரும் இவர்கள், அந்தந்த நகரங்களில் உள்ள முகவரிகளை கொடுத்தும் புதிய பாஸ்போர்ட் பெற்றுக் கொள்கின்றனர்.இந்நிலையில் சென்னையில், போலி பாஸ்போர்ட் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை செய்த தனிப்படை போலீசார், இந்த கும்பலிடம் இருந்து தமிழகம் முழுவதும் போலி பாஸ்போர்ட் பெற்ற நபர்களின் தகவல்களை திரட்டினர். சின்னாளபட்டியை சேர்ந்த வியாபாரிகள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதால், அவர்களுக்கும் போலி பாஸ்போர்ட் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்று ரகசிய விசாரணை செய்து வருகின்றனர்.