புதுடெல்லி: சாலை விபத்தால் நடக்கும் உயிர் பலி சம்பவங்களில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. இங்கு தினந்தோறும் சராசரியாக 5 பேர் சாலை விபத்தில் உயிர் இழக்கிறார்கள்.இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஏற்படும் சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகள் குறித்து சென்டர் பார் சயின்ஸ் அண்டு என்விரான்மென்ட் என்ற அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 6 ஆண்டுகளில் டெல்லியில் சாலை விபத்துக்கு 12300 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 1820 பேர் சாலை விபத்துகளில் உயிர் இழந்துள்ளனர். அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 பேர் விபத்து காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்திய நகரங்களில் சாலை விபத்து பலி எண்ணிக்கையில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மும்பையில் இந்த அளவு உயிர் பலி இல்லை. கடந்த 2012ம் ஆண்டில் மும்பையில் 25 ஆயிரம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதே சமயம் 500 பேர் மட்டுமே சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 7 ஆயிரம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இங்கு 1850 பேர் இறந்துள்ளனர். சென்னையில் 9 ஆயிரம் சாலை விபத்துகளில் 1300 பேர் இறந்துள்ளனர். பெங்களூரில் 6 ஆயிரம் விபத்துகளில் 650 பேர் இறந்துள்ளனர். கொல்கத்தாவில் குறைந்த அளவில் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இங்கு கடந்த 2012ம் ஆண்டில் 4 ஆயிரம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 500 பேர் இறந்துள்ளனர். டெல்லியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கும் பகுதி என 128 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தினந்தோறும் குறைந்தது 10 விபத்துகள் நடைபெறுகின்றன. குறைந்தது 3 பேர் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.