புதுடெல்லி: ரயில் கட்டண உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதை தொடர்ந்து, அன்றாடம் வேலைக்கு செல்வோர் அதிகம் பயன்படுத்தும் புறநகர் ரயில்களின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ரயில் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். அந்த சமயத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்ததால் கட்டண உயர்வு அறிவிக்கப்படவில்லை. தேர்தல் முடிவுகள் கடந்த மே 16ம் தேதி வெளியிடப்பட்டன. அன்று மாலையில், ரயில் கட்டணம் 14.2 சதவீதம் உயர்த்தப்பட்டது.
சரக்கு கட்டணம் 6 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது.புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில், வேண்டுமென்றே கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாஜ கண்டனம் தெரிவித்தது. உடனே கட்டண உயர்வு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆட்சி மாற்றத்தை உறுதி செய்ததை தொடர்ந்து, கட்டண உயர்வு குறித்து புதிய அரசு முடிவு செய்யும் என அப்போது ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்தது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு கடந்த மே மாதம் 26ம் தேதி பதவி ஏற்றது. ரயில்வே அமைச்சராக கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா பதவி ஏற்றுக் கொண்டார். ரயில் கட்டண உயர்வு குறித்து பிரதமருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்றார். ரயில்வே நஷ்டத்தில் இயங்குவதால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என தகவல் வெளியானது. பின்னர், ரயில் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதம், சரக்கு கட்டணம் 6 சதவீதம் உயர்த்தப்பட்டது. நாளை முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
இந்த கட்டண உயர்வு சாதாரண பாசஞ்சர் ரயில் முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வரை அனைத்து ரயில்களிலும் அனைத்து வகுப்புகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் புறநகர் ரயில் கட்டணம் மிகவும் கடுமையாக உயர்த்தப்பட்டது. மும்பை போன்ற பெருநகரங்களில் 100 சதவீதம் அளவுக்கு புறநகர் ரயில் பாஸ் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் மட்டும் அல்லாது பாஜ கூட்டணியில் உள்ள சிவசேனாவும் ரயில் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், புறநகர் ரயில் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரேடியாக கட்டணத்தை உயர்த்தாமல், படிப்படியாக கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மும்பையை போல் இதர பெருநகரங்களில் உள்ள புறநகர் ரயில் கட்டணத்தை படிப்படியாக உயர்த்த முடிவு செய்திருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரயில்வே அமைச்சருடன் சிவசேனா, பாஜ எம்பிக்கள் சந்திப்பு ரயில் கட்டண உயர்வுக்கு பாஜவின் முக்கிய கூட்டணி கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சாதாரண மனிதன் மீது ரயில் ஏறிச் செல்வது போல் கட்டண உயர்வு உள்ளது என அக்கட்சி வெளிப்படையாக விமர்சித்தது. இந்நிலையில், மகாராஷ்டிராவை சேர்ந்த சிவசேனா, பாஜ கட்சிகளின் எம்பிக்கள் 10 பேர் இன்று காலைடெல்லியில் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் ஒட்டுமொத்த ரயில் கட்டண உயர்வையும் வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால், கட்டண உயர்வை வாபஸ் பெற வாய்ப்பில்லை என அவர்களிடம் கவுடா கூறியிருக்கிறார். எனினும், புறநகர் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்வதாக அவர் உறுதியளித்திருப்பதாக தெரிகிறது.