ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேர் திருவிழா
திருச்சி:ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேர் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா நாளை (5ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதிகாலை 3.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 3.30 மணிக்கு கொடி மண்டபத்தை அடைகிறார். அங்கிருந்து கொடிப்படம் புறப்பாடு நடைபெறுகிறது. காலை 5 மணி முதல் 5.45 மணிக்குள் மீன லக்னத்தில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றப்படுகிறது. 10ம் திருநாளான 14ம் தேதி பங்குனி தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் நம்பெருமாள் அதிகாலை 5.45 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து கோரதம் எனும் பங்குனி தேர் மண்டபத்துக்கு புறப்படுகிறார். 6.30 மணிக்கு தேரில் எழுந்தருளுகிறார். 7.15 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.