சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் இன்று மாலை 6 மணிக்கு பாஜ கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார். லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருவதால், அந்த பகுதியே திருவிழா கோலம் பூண்டிருக்கிறது. மோடிக்கு தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாஜ பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஒவ்வொரு மாநிலமாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் தமிழகத்திற்கு ஏற்கனவே 2 முறை வந்து பிரசார கூட்டங்களில் பங்கேற்றார். இந்நிலையில், சென்னையை அடுத்த வண்டலூரில் மாநாடு போல் நடத்தப்படும் பிரமாண்ட கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசவிருக்கிறார்.
வண்டலூர் விஜிபி மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் மோடியுடன், பாஜ முன்னாள் தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். நாடாளுமன்ற வடிவில் 160 அடி நீளம் 40 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் சேர்களும் போடப்பட்டுள்ளன.
மேடை நடுவே 30 அடி அகலம் 12 அடி உயரம் கொண்ட பிரமாண்ட எல்இடி திரையும், மைதானம் முழுவதும் 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்ட மைதான முகப்பு செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் படங்கள் அலங்கார நுழைவுவாயிலும் உள்ளது. சென்னையில் இருந்து வண்டலூர் வரை வழிநெடுக கொடி தோரணம், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பல கோணங்களில் மோடி படங்கள் இடம் பெற்றுள்ளன. பொதுக்கூட்ட மேடை முழுவதும் நேற்று இரவு போலீஸ் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்ட போலீசார் உள்பட 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் இன்று காலை பிரசாரம் செய்த நரேந்திர மோடி, கவுகாத்தியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 6.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு தேசிய பொது செயலாளர் முரளிதர ராவ், தமிழக பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. வழிநெடுகிலும் பாஜ இளைஞர் அணி செயலாளர் வினோஜ் பி.செல்வம் தலைமையில் மேளதாளங்கள், தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. வர்த்தக பிரிவு மாநில துணை தலைவர் வி.எஸ்.ஜெ. சீனிவாசன் உள்பட ஏராளமானோர் வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். வரவேற்பை முடித்த பின், மாலை 6.45 மணிக்கு காரில் மேடைக்கு மோடி வருகிறார். பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பின், அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை 9.30 மணிக்கு அவர் எஸ்.ஆர்.எம். பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். அங்கிருந்து 11.45 மணிக்கு புறப்பட்டு விமான நிலையம் வந்து, தனி விமானத்தில் கேரள மாநிலம் கொச்சி செல்கிறார்.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பாஜ தொண்டர்கள் கார், வேன்கள் மூலமாக சென்னையில் குவிந்த வண்ணம் உள்ளனர். வண்டலூரில் பிற்பகலில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், அப்பகுதியே திருவிழா கோலம் பூண்டுள்ளது. பாஜ கூட்டணியில் மதிமுக, பாமக, கொங்கு நாடு முன்னேற்ற கழகம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி, ஸ்ரீதர் வாண்டையார் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம் உள்ளிட்டவை சேர்ந்துள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் கூட்டணி உறுதியாகி உள்ளது. மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தேமுதிகவையும் தங்கள் கூட்டணியில் சேர்க்க பாஜ நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர். எனினும், எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதனால், மாலையில் நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பது உறுதியாகவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், மீண்டும் மோடியை அழைத்து பிரமாண்ட கூட்டம் நடத்தி அதில் கூட்டணி தலைவர்களை கலந்து கொள்ளச் செய்யலாம் என தமிழக பாஜ நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். இதற்கிடையே, இன்று இரவு சென்னையில் தங்கும் மோடியை, மதிமுக பொது செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சந்தித்து பேசலாம் என்று தெரிகிறது.