விரைவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ரஜினி திடீர் முடிவு
சென்னை:விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த். ஆனால் இது அரசியல் பற்றி பேசுவதற்கான சந்திப்பு இல்லை. ஏப்ரல் 11ம் தேதி திரைக்கு வரவுள்ள ‘கோச்சடையான்‘ படத்தை அறிமுகப்படுத்துவதற்காக சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். இப்படத்தை அவரது இளைய மகள் சவுந்தர்யா டைரக்டு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.
சமீபகாலமாக ரிலீசுக்கு முன்னதாக படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக வித்தியாசமான முறையில் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அதில் கலந்துகொள்கின்றனர். ‘கோச்சடையான்‘ படத்துக்கும் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்த சவுந்தர்யா திட்டமிட்டுள்ளார். ஆனால் அந்த நிகழ்ச்சிகளில் ரஜினி பங்கேற்கவில்லை. அந்நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் விதமாகவும், படத்தை அறிமுகப்படுத்தும் வகையிலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மட்டுமே ரஜினி கலந்துகொள்ள உள்ளார்.
தீபிகா படுகோன் மற்றும் படத்தில் நடித்திருக்கும் மற்ற நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இதன் பிறகு நடக்கும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ரஜினி பங்கேற்க மாட்டாராம். ஆனால் எல்லா நிகழ்ச்சியிலும் தீபிகா படுகோன் பங்கேற்க ஓகே சொல்லி இருக்கிறார். அவரிடம் ரஜினியின் வரஇயலாத நிலையை தெரிவித்தபோது, ‘சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் நிச்சயம் வருகிறேன்‘ என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் உறுதி அளித்திருக்கிறார்.