மும்பை கடற்கரையில் சத்ரபதி சிவாஜிக்கு 100 கோடியில் சிலை முதல்வர் அறிவிப்பு
மும்பை:மும்பை கடற்கரையில் ரூ. 100 கோடி செலவில் சத்ரபதி சிவாஜிக்கு சிலை அமைக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவான் அறிவித்துள்ளார்.இரும்பு மனிதர் என போற்றப்படும் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலுக்கு அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் ரூ. 2500 கோடி செலவில் 182 அடி உயர சிலை அமைக்க மாநில முதல்வர் நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையின் உயரத்தை விட இரண்டு மடங்கு உயரத்தில் அமைக்கப்படும் இந்த சிலை உலகிலேயே மிக உயரமாக சிலையாக அமையும். இதற்கு ஒற்றுமை சிலை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வல்லபாய் பட்டேல் சிலைக்கு போட்டியாக மும்பை கடற்கரையில் சத்ரபதி வீர சிவாஜிக்கு ரூ. 100 கோடியில் சிலை வைக்கும் திட்டத்தை மாநில முதல்வர் பிரிதிவிராஜ் சவான் நேற்று அறிவித்தார். உலகிலேயே மிக உயரமான சிலையாக இது அமையும் என சவான் தெரிவித்தார். இருப்பினும் சிலையின் உயரம் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. மும்பை கவர்னர் மாளிகையிலிருந்து 1.2 கிலோ மீட்டர் தூரத்திலும், நாரிமன் பாயிண்ட்டிலிருந்து 2.6 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த சிலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரபிக் கடல் ஓரம் 16 ஹெக்டேர் பரப்பளவில் பூங்காவும், சிலையை நிறுவ 4 மீட்டர் உயர மேடையும் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.