வாஷிங்டன்:இந்தியர்களின் படிப்பு, திறமை, அறிவாற்றல் ஆகியவற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புக்கு வந்து கொண்டிருக்கின்றனர். பெப்சி நிறுவனத்தின் இந்திரா நூயி, மாஸ்டர் கார்டின் அஜய் பங்கா ஆகியோர் இதற்கு உதாரணம்.
தற்போது கம்ப்யூட்டர் உலகின் ஜாம்பவான் நிறுவனமான மைக்ரோசாப்டின் தலைமை பொறுப்பில் இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ), சத்ய நாதெள்ளாவை நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. சத்ய நாதெள்ளா, கடந்த 22 ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இதுவரையில் இப்பொறுப்புக்கு இந்தியர் யாரும் நியமிக்கப்பட்டதில்லை. தற்போது முதல் முறையாக சத்ய நாதெள்ளா இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவிக்கு கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, மோட்டரோலா நிறுவனத்தி ன் முன்னாள் சிஇஓ சஞ்சய் ஆகிய இந்தியர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், சத்ய நாதெள்ளா நிறுவனத்திலேயே பணியாற்றுபவர் மற்றும் திறமையான இன்ஜினியர் என்பதால், அவரை சிஇஓ பொறுப்புக்கு தேர்ந்தெடுப்பது சரியாக இருக்கும் என்று நிறுவனத்தின் பல இயக்குநர்கள் குரல் கொடுத்தனர்.
இதன் அடிப்படையில் சத்ய நாதெள்ளா, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐதராபாத்தில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறியவரான அவர் தமக்கு கிடைத்துள்ள பதவியில் திறம்பட பணியாற்றி, நிறுவனத்தின் பெயரை உயர்த்த பாடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.