மத்திய அரசுக்கும், நிதியமைச்சருக்கும் சந்தோஷத்தை தரும் செய்தி வெளியாகி உள்ளது. அது கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக டீசல் உபயோகம் குறைந்துள்ளதுதான். நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் டீசல் விற்பனை 0.8 சதவீதம் சரிவடைந்துள்ளது. நாட்டின் மொத்த பெட்ரோலியப் பொருள்களின் விற்பனையில் டீசல் மட்டும் 45 சதவீத இடத்தை பிடித்துள்ளது. 2003ம் ஆண்டு முதல் கடந்த நிதியாண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 6 முதல் 8 சதவீதம் வரையில் டீசல் விற்பனை உயர்ந்து வந்துள்ளது. டீசல் விற்பனை உயர்வது மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் விஷயம். அதாவது, டீசலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதாலும், அதை மானிய விலையில் விற்பதாலும் அரசுக்கு பெருமளவில் நஷ்டம்தான். எண்ணெய் நிறுவனங்களுக்கு கொட்டிக் கொடுக்க வேண்டும்; அந்நியச் செலாவணி பெருமளவு காலியாகும்.
இதை தடுக்கத்தான் சமீப காலமாக மாதந்தோறும் டீசல் விலையில் 50 காசு உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு அனைத்து மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு இருந்தபோதும், விற்பனை ஓரளவு குறைந்துள்ளது.இதற்கு மற்றொரு காரணத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதாவது மின்னுற்பத்தி அதிகரித்துள்ளதால், தொழிற்சாலைகளில் ஜெனரேட்டர்களுக்கான டீசல் தேவை குறைந்துள்ளது. விவசாயிகளின் கிணற்று பாசனத்துக்கு தேவையான மின்சாரம் அளிக்கப்படுவதால் அவர்களும் டீசல் இன்ஜின்களை பயன்படுத்துவது குறைந்துள்ளது.
டீசல் பயன்பாடு குறைவினால் மற்றொரு நல்ல காரியமும் மறைமுகமாக நடந்துள்ளது. அதாவது சுற்றுச்சூழல் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. பெட்ரோலை விட டீசலில் மாசு அதிகம். இதன் புகையை அதிகம் சுவாசித்தால் பல்வேறு பாதிப்புகள் வரும். தற்போது டீசல் தேவை குறைந்து, அதன் உபயோகம் சரிந்துள்ளதால், சூழலுக்கும் நன்மை ஏற்பட்டுள்ளது.
ஆனால், டீசல் விற்பனை குறைவை மட்டும் வைத்து சந்தோஷம் அடைந்து விட முடியாது. ஏனெனில், டீசல் என்பது பெருமளவில் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் டீசல் பயன்பாட்டை குறைத்துள்ளார்கள் என்றால், உற்பத்தியில் பாதிப்பா என்பதையும் ஆராய வேண்டும். உற்பத்தி குறைந்தால் அது நாட்டுக்கு பாதகமாக அமையும். தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்ற பிற காரணிகள் இருக்கின்றன.அப்படி பாதிப்பு இல்லாமல் உண்மையிலேயே, நல்ல வகையில் டீசல் பயன்பாடு குறைந்திருந்தால் வரவேற்கத்தக்கதுதான்.