சத்தியமங்கலம்:இறப்புக்குபின் தனது உடல் உறுப்புகளை காட்டில் வாழும் விலங்குகளுக்கு உணவாக வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார் விவசாயி ஒருவர். ஈரோடு மாவட் டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம் பூர் மலைப்பகுதி பசுவனாபுரத்தைச் சேர்ந்த விவசாயி நடராஜ் (57). காய்கறி தோட்டம் வைத்துள்ளார். இவர் விலங்குகள் மீது மிகுந்த பற்று கொண்டவர். இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார்.
இரவுநேரத்தில் தோட்டத்துக்குள் விலங்குகள் வந்தால் நாய்கள் குரைத்து இவரை உஷார்படுத்தும். நடராஜ் வெளியே வந்து, மர உச்சியில் உள்ள பரண் மீதேறி வனவிலங்குகளை காண்காணிப்பார். வனவிலங்குகளின் மீது தாக்குதல் நடத்தாமல் அவற்றின் போக்குக்கு விட்டுவிட்டு சிறிதுநேரம் டார்ச்லைட் அடித்து விரட்ட முயற்சி மேற்கொள்வார்.
வனவிலங்குகளை நேசிக்கும் நடராஜ் தனது இறப்புக்கு பின் தனது உடல் உறுப்புகளை விலங்குகளுக்கு உணவாக வழங்க விரும்புவதாக தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிறுவயது முதலே விலங்குகளை நேசிப்பதால் தோட்டத்தில் எருமை, பசுகள், நாய் மற்றும் ஆடுகளை வளர்த்து வந்தேன். நான் இறந்த பின், எந்த பயனுமின்றி உடல் மண்ணில் வீணாவதை விரும்பவில்லை. உணவின்றி வாடும் கழுதைப்புலி, சிறுத்தை, முதலை, புலி, கரடி மற்றும் கழுகுகள் போன்ற வன உயிரினங்களுக்கு எனது உடல் உறுப்புகளை தானமாக வழங்க விரும்புகிறேன். உடல் உறுப்புகளை விலங்குகளுக்கு உணவாக வழங்கவேண்டும். இதற்கான உறுதிமொழி பத்திரம் வழங்கவும் தயாராக உள்ளேன். இவ்வாறு நடராஜ் கூறினார்.
மனிதர்களுக்கு உடல்உறுப்பு தானம் வழங்குவது தற்போது அதிகரித்துள்ள நிலையில், விலங்குகளுக்கும் தனது உறுப்புகளை இரையாக்க விரும்பும் விவசாயி நடராஜை பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சர்யப்படுகின்றனர்.