மீண்டும் நடிக்கிறார் ஆனந்த்பாபு
சென்னை:மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு. 80, 90களில் ஹீரோவாக நடித்த இவர் திடீரென்று காணாமல் போனார். மனநிலை பாதித்த நிலையில் வேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தது தெரிந்தது. அதன் பிறகு 2வருடத்துக்கு முன் சூர்யா நடித்த ‘ஆதவன் படத்தில் ரீஎன்ட்ரி ஆனார். ஆனால் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.
25 வருடங்களுக்கு முன்பு ஆனந்த்பாபு ஹீரோவாக நடித்த ‘பாடும் வானம்பாடி என்ற படம் 250 நாட்கள் ஓடி வெற்றிபெற்றது. அப்படத்தின் இயக்குனர் எம்.ஜெயக் குமார் தற்போது ‘ஜமாய் என்ற பெயரில் புதிய படம் தயாரித்து இயக்குகிறார். இதில் ஆனந்த்பாபுவுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதுபற்றி கூறும்போது, ‘சிறுவன் ஒருவனுக்கு நடனம் சொல்லித் தரும் மாஸ்டராக கெஸ்ட்ரோலில் நடிக்க ஆனந்த்பாபுவிடம் கேட்டபோது மறுப்பு சொல்லாமல் ஒப்புக்கொண்டு நடித்தார். இதில் நவீன், உதய் ஹீரோக்கள். வைஜெயந்தி, நிமிஷா ஹீரோயின்கள். எம்.டி. சுகுமார் ஒளிப்பதிவு. தினா இசை. கல்லூரி காதல், இசை, நடனம் கலந்த கதையாக இது உருவாகிறது என்றார்.