நீச்சல் உடைக்கு மறுப்பு காஜல் கறார் பேட்டி
சென்னை:நீச்சல் உடையில் நடிக்க முடியாது என கறாராக கூறியிருக்கிறார் காஜல் அகர் வால். சமீபகாலமாக சினிமாவில் கவர்ச்சி அதிகரித்துவிட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா, அனுஷ்கா என பெரும்பாலான நடிகைகள் கவர்ச்சியாக நடித்துள்ளனர். நீச்சல் உடையில் நடிப்பது பற்றி காஜல் அகர்வாலிடம் கேட்டபோது அவர் டென்ஷன் ஆனார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘எனக்கு இந்திய பெண்ணின் முக அம்சம்தான் அதிகம். அதற்கு ஏற்ற கதாபாத்திரங்களைதான் இதுவரை ஏற்று நடித்து வருகிறேன். ஆனாலும் ஒரே பாணியிலான வேடங்களில் நடிப்பதில்லை. நீச்சல் உடை அணிந்து நடிக்க எனக்கு விருப்பமில்லை. அது எனது உணர்வுகளுக்கு பொருந்தி வராது. எனக்கென்று ஒரு எல்லை வகுத்திருக்கிறேன். எனது குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்க முடியாத படியான எந்தவொரு காட்சியிலும் நடிக்க மாட்டேன்’’ என்றார் திட்டவட்டமாக.
‘‘சில வேடங்களை நடிக்க முடியாது என்று வலுக்கட்டாயமாக தவிர்த்து விடுவேன். ஏனென்றால் அப்படி நடிக்க எனக்கு விருப்பம் இல்லாததுதான். சில காட்சிகளை தேர்வு செய்து நடிக்கிறேன். எனக்கு பொருந்தாத காட்சிகளில் நடிக்க மாட்டேன்’’ என்கிறார் தமன்னா. கவர்ச்சி பற்றி ஏற்கனவே கருத்து வெளியிட்டிருந்த சமந்தாவும், ‘நீச்சல் உடையில் நடிக்கும் எண்ணம் இல்லை’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.