பொருளாதார நெருக்கடிக்கு மத்திய அரசுதான் காரணம்
புதுடெல்லி: மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக டாலரின் விலை ரூ.80ஐ எட்டும் அபாயம் உள்ளது. கடந்த 1991ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையை நோக்கி இந்தியாவை காங்கிரஸ் கொண்டு செல்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
தங்கம் மற்றும் காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. டாலருக்கு எதிரான விலையும் ரூ.62ஐ எட்டியுள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நேரடியான நடவடிக்கைகள் எதையும் பிரதமர் எடுக்கவில்லை. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான பொருளாதார நிலைமையை சமாளிக்க மாற்று பொருளதார வழிமுறைகளையும், கொள்கைகளையும் உடனடியாக மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக ரூ.80 எட்டும் அபாயம் உள்ளது. பங்கு சந்தை புள்ளிகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளன. இதனால் 1991ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையை நோக்கி இந்தியாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டு சென்றுள்ளது. தற்போது இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
இதேபோன்ற ஒரு நிலையில்தான் 1991ல் இந்திய அரசு தங்கத்தை உலக வங்கிகளில் அடகு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மீண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.
பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், 'கடந்த 1991ல் ஏற்பட்டது போன்ற ஒரு பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கு ஏற்படாது. ஆறேழு மாதங்களுக்கு தேவையான அன்னிய செலாவணி கையிருப்பு உள்ளது' என்று உறுதிபட கூறியுள்ளார்.