மார்பகத்தில் வெடிகுண்டை பதுக்கி அல் கய்தா பெண் தீவிரவாதிகள் விமான நிலையத்தை தகர்க்க சதி லண்டனில் கண்காணிப்பு தீவிரம்
லண்டன்:லண்டனில் விமான நிலையத்தை அல் கய்தா பெண் தீவிரவாதிகள் தகர்க்க சதி திட்டம் தீட்டியிருப்பதாக கிடைத்த உளவு துறை தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த மாதம் பல்வேறு தற்கொலை படை தாக்குதல்கள் நடைபெற்றன. அந்த நாடுகளில் சிறைகளை தகர்த்தனர். அப்போது ஏராளமான தீவிரவாதிகள் வெளியில் தப்பியோடினர். இதற்கு பின்னணியாக அல் கய்தா தீவிரவாத இயக்கத்தின் கைவரிசை உள்ளது என சர்வதேச போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் பல்வேறு முஸ்லிம் நாடுகளில் உள்ள அமெரிக்க, இங்கிலாந்து தூதரகங்களின் மீது தாக்குதல் நடத்த போவதாக மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் ஒரு வாரம் தங்களது தூதரகங்களை மூடின.
இந்நிலையில், அல் கய்தா தீவிரவாத இயக்கத்தின் பெண் தீவிரவாதிகள், தங்களது மார்பகங்களில் வெடிகுண்டுகளை வைத்து கொண்டு லண்டனில் உள்ள ஹீப்ரு விமான நிலையத்தை தகர்க்க போவதாக இங்கிலாந்து உளவு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்துக்குள் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை விமான நிலைய ஸ்கேனர்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்களால் கூட கண்டுபிடிக்க முடியாது. ஒரு வகை ரசாயனத்தை ஊசி மருந்தின் மூலமாக உடலில் செலுத்தி வெடிகுண்டை வெடிக்க செய்ய முடியும் என்றும் தெரிய வந்துள்ளது. அல் கய்தாவின் வெடிகுண்டு நிபுணர் இப்ராகிம் அல் அசிரி என்பவர் இதுபோன்ற வெடிகுண்டுகளை உருவாக்கி உள்ளதாக உளவு துறையினர் கண்டுபிடித்துள்ளனர். எனவே, அல் கய்தாவின் சதி திட்டத்தை முறியடிக்க ஹீப்ரு விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெண் பயணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சோதனைக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.