இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பார்லிமென்ட் அருகே நடுரோட்டில் நின்று கொண்டு ஆசாமி ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பார்லிமென்ட் அருகே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக பார்லிமென்ட்டை சுற்றியுள்ள பகுதி ரெட் அலர்ட் பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு ராணுவத்தினர், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மிகவும் பாதுகாப்பான இப்பகுதி சாலையில் மாலை 5 மணியளவில் ஆசாமி ஒருவர் காரில் வந்தார். திடீரென காரை நடுரோட்டில் நிறுத்தினார். பின்னர் காரை நிறுத்தி விட்டு அவசரமாக இறங்கி வந்தார். அவரது கையில் 2 துப்பாக்கி இருந்தது.
திடீரென அந்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் துப்பாக்கியை கீழே போடவில்லை. இதற்கிடையில் பார்லிமென்டில் செய்தி சேகரிக்க வந்திருந்த டிவி சேனல்கள், இந்த நிகழ்ச்சியை டிவியில் நேரடியாக ஒளிபரப்பின. உடனடியாக போலீசார் விசாரித்ததில், துப்பாக்கியால் சுட்ட ஆசாமியின் பெயர் சிக்கந்தர் ஹயாத் என்பதும் அவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளதும் தெரிய வந்தது.
இந்நிகழ்ச்சியை டிவியில் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிக்கந்தரின் மனைவி, அவரிடம் போனில் பல முறை தொடர்பு கொண்டு பேசினார். துப்பாக்கியை போட்டுவிட்டு போலீசில் சரணடையும்படி கூறினார். அப்போதும் அவர் கேட்கவில்லை. சமாதான பேச்சு நடத்திய போலீசாரிடம், பாகிஸ்தானில் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தன்னை அங்கிருந்து போக அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். மேலும், பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்றார். இதனால் பதற்றம் அதிகரித்தது.
ஆறு மணி நேரத்துக்கு பிறகு சிக்கந்தரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிக்கந்தரை சுற்றிவளைக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. அசம்பாவிதம் ஏதும் நடந்து விட கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தோம். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு அல்லது போதையில் சிக்கந்தர் இப்படி செய்திருக்கலாம். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்றனர். ஆனால், பாதுகாப்பு மிகுந்த பார்லிமென்ட் அருகே இதுபோன்ற சம்பவம் நடந்ததும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியது பாகிஸ்தானில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.