அமைதியை சீர்குலைக்கும் பேச்சு ஆந்திர முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு
சித்தூர்:தெலங்கானா அறிவிக்கும் முன், நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து முடிவு செய்ய வேண்டுமென ஆந்திர முதல்வர் பேசியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய சைதராபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கடந்த 8ம்தேதி இரவு ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நதிநீர் பங்கீடு, மின்சாரம், அரசு ஊழியர்கள் பிரச்னைகள் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். அவரது, பேச்சு மாநிலத்தில் உள்ள 2 பகுதி மக்களின் அமைதியை சீர் குலைக்கும் வகையிலும், பிரச்னையை மேலும் தூண்டும் வகையிலும் உள்ளது.
எனவே, அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, ஜனார்த்தன்கவுடு என்ற வக்கீல் ஐதராபாத்தில் உள்ள சைதராபாத் கோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை 11வது மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். மேலும், முதல்வர் கிரண்குமார் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு தரூர் நகர காவல் நிலையத்துக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இது தொடர்பான விசாரணை அறிக்கையை வரும் செப்டம்பர் மாதம் 16ம்தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.