புதுடெல்லி:தகவல் அறியும் உரிமை சட்ட அதிகார வரம்பில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் அமைப்புகளின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் அரசு துறைகளில் இருந்து எந்த தகவலையும் கேட்டு பெற முடியும். இதற்கென அரசு அலுவலகங்களில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் அறியும் சட்டம் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தகவல் கமிஷனும் அதற்கு ஒரு தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், ராணுவம், சிபிஐ, உளவு துறை என குறிப்பிட்ட சில முக்கிய துறைகளுக்கு தகவல் அறியும் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடைகள் குறித்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என டெல்லியை சேர்ந்த சமூக சேவர் ஒருவர் தகவல் கமிஷனுக்கு விண்ணப்பித்தார். நன்கொடை விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிட மறுத்ததை தொடர்ந்து, அவர் இந்த கோரிக்கையை தகவல் கமிஷனுக்கு அனுப்பினார்.
அந்த மனுவை தகவல் ஆணையர் கடந்த ஜூன் மாதம் விசாரித்து, தகவல் அறியும் சட்டம் அரசியல் கட்சிகளுக்கு பொருந்தும் என்று உத்தரவிட்டார். அரசியல் கட்சிகளின் வரவு செலவு, நன்கொடை, கட்சி நிர்வாக நடைமுறை, வேட்பாளர் தேர்வு போன்றவை குறித்து பொது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசியல் கட்சிகள் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில் இந்த சட்டத்தின் 2வது பிரிவல் திருத்தம் செய்யும் மசோதாவை சட்ட துறை அமைச்சகம் தயார் செய்தது. இந்த திருத்த மசோதா இன்று காலை மக்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் தாக்கல் செய்யப்படுகிறது.
மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி மசோதாவை தாக்கல் செய்கிறார். தெலங்கானா பிரச்னை, எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் போன்ற பிரச்னைகளால் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. எனினும் தகவல் அறியும் உரிமை திருத்த மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருப்பதால் இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் எந்த பிரச்னையும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மக்களவை இன்று காலை கூடியதும், தெலங்கானா, சோலார் பேனல் மோசடி, எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு உள்பட பல முக்கிய பிரச்னைகளை முன்வைத்து பா.ஜ. உள்பட பல கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறுமா?
கடந்த புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு மசோதா மீது இன்று விவாதம் நடத்தப்படுகிறது. விவாதத்தை தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு அல்லது டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. இந்த மசோதாவுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தாத பட்சத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்படும். உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற ஒத்துழைப்பு அளிக்கப்படும் என பாஜ அறிவித்துள்ளது. இதனால் அதிமுக, திமுக, சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் எதிர்ப்பை மீறி மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.