திருமலை:பவித்ர உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 17ம் தேதி முதல் 3 நாட்கள் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைஷ்ணவ சம்பிரதாயப்படி ஆகம விதிகளின் கீழ் சுவாமிக்கு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு செய்யப்படும் பூஜைகள் மற்றும் பணியாளர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளுக்கு பரிகாரமாக ஆண்டுதோறும் 3 நாட்கள் பவித்ர உற்சவம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 16ம் தேதி பவித்ர உற்சவத்துக்கான அங்குரார்ப்பனம் செய்யப்படுகிறது. இதையொட்டி அன்று வசந்த உற்சவம் சகஸ்கர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது.
17ம் தேதி முதல் 19ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஏழுமலையான் கோயிலுக்குள் பவித்ர உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு யாகம், பூஜைகள் செய்யப்பட உள்ளது. இதையொட்டி இந்த 3 தினங்களில் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் ஏழுமலையானை தரிசிப்பதில் எந்த மாற்றம் இல்லை என்று தேவஸ்தான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தரிசன வரிசையில் தள்ளுமுள்ளு ஆந்திராவில் நடைபெற்று வரும் பந்த் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை அதிகரித்தது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்கைளுடன் வரும் பெற்றோர்களை அனுமதிக்கும் சுபதம் நுழைவு வாயிலில் நேற்று ஒரே நேரத்தில் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். அதே நேரத்தில் சகஸ்கர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட் பெற்ற பக்தர்களும் வந்ததால் திடீர் நெரிசல் ஏற்பட்டது. அப்போது பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் அவதிப்பட்டனர்.