பாகிஸ்தானை விட்டு வெளியேற தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவு : அமெரிக்க அரசு நடவடிக்கை
வாஷிங்டன்: அமெரிக்க தூதரகங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாக கிடைத்துள்ள உளவுத்துறை தகவலையடுத்து, பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு தனது தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அல்கய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்ற அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து முஸ்லிம் நாடுகளில் உள்ள தூதரகங்களை மூட அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது. தீவிரவாதிகள் தாக்குதல் மிரட்டல் எதிரொலியாக 19 முஸ்லிம் நாடுகளில் உள்ள தனது தூதரங்களை மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ‘அல்கய்தா அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் அல்கய்தா முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு விடும், இருந்த போதிலும் ஒரு சில இடங்களில் அல்கய்தா தாக்குதல் நடத்த உள்ளதாக உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே அமெரிக்கர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க தூதரக உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், ‘உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவலின்படி பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் அமெரிக்க தூதரகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே, அமெரிக்கர்கள் தேவையில்லாமல் பாகிஸ்தானில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும், லாகூர் தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் அனைவரும் வெளியேறி அமெரிக்கா திரும்பும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இதே போல் முஸ்லிம் நாடுகளில் உள்ள 17 தூதரக அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.