விசாகப்பட்டினத்தில் தமன்னா சுற்றி வளைப்பு தெலங்கானா எதிர்ப்பாளர்கள் பிரச்னை செய்ததால் பரபரப்பு
ஐதராபாத்:விசாகப்பட்டினம் வந்த தமன்னாவை தெலங்கானா எதிர்ப்பாளர்கள் சுற்றி வளைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடலோர ஆந்திராவில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக கடை அடைப்பு, சாலை மறியல், கல் வீச்சு என பரபரப்பாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கு பட ஷூட்டிங்கில் பங்கேற்க நடிகை தமன்னா நேற்று விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
இதையறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் விமான நிலையத்துக்கு வெளியே திரண்டார்கள். தமன்னா வெளியே வந்ததும் அவரை சூழ்ந்துகொண்டு ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவாக ‘ஜெய் சமய்க் ஆந்திரா என கோஷம் போட சொன்னார்கள்.
அதற்கு அவர், ‘நான் இந்தியன். இதுபோன்ற பிரச்னைகளில் என்னை இழுக்காதீர்கள் என்றதுடன் ‘ஜெய் இந்தியா என்று கோஷமிட்டார். இதனால் போராட்டக்காரர்கள் கோபம் அடைந்தனர். இதற்கிடையில் விமான நிலைய காவலர்கள் ஓடிவந்து கூட்டத்தை கலைத்து தமன்னாவை மீட்டனர். அவரை அங்கிருந்து பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.