அண¢ணா நகர் மூதாட்டி கொலை செல்போன் நிறுவன ஊழியர் சிக்கினார்
பூந்தமல்லி: அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் எஸ்எம் நகர் பகுதியில் வசிப்பவர் முனிராஜ் (45). ஆழ்வார்பேட்டையில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் துணை மேலாளராக உள்ளார். இவரது அம்மா திரிபுரசுந்தரி (65). நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த திரிபுரசுந்தரியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு 65 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.3 கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்களை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார். இது குறித்து ஜெஜெ நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். முனிராஜின் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் குற்றவாளியின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் மூலம் போலீசார் துப்பு துலக்கி வந்தனர். முனிராஜ் வீட்டில் உள்ள செக்யூரிட்டி, வேலைக்கார பெண், பக்கத்து வீட்டில் குடியிருப்போரிடம் கேமராவில் உள்ள வாலிபர் புகைப்படத்தை காட்டி போலீசார் விசாரித்து வந்தனர்.
கடந்த வாரம் முனிராஜ் வீட்டிற்கு காரைக்குடியை சேர்ந்த கவுதம் (24) என்ற தனியார் செல்போன் நிறுவன ஊழியர் இன்டர் நெட் இணைப்பு தொடர்பான பிரச்னையை சரிசெய்ய வந்துள்ளார். அயப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் வாடகை வீட்டில் அவர் தங்கியிருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டி கிடந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. முனிராஜ் வீட்டின் கேமராவில் கொலை நடந்த நேரத்தில் கவுதம் உருவம் பதிவாகி இருந்தது. அம்பத்தூரில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த கவுதமை நேற்று நள்ளிரவில் போலீசார் பிடித்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் வருகிறார்கள். மூதாட்டி கொலையில் செல்போன் நிறுவன ஊழியர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.