சேலம் அன்னதானப்பட்டியில்வீட்டின் ஓட்டை பிரித்து திருட முயன்றவர் கைது கம்பத்தில் கட்டி வைத்து அடி
சேலம்: வீட்டின் ஓட்டை பிரித்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். சேலம் அன்னதானப்பட்டி உத்தரப்பன் நகரை சேர்ந்தவர் தங்கம்மாள் (60). இவரது கணவர் இறந்து விட்டார். வீட்டில் தங்கம்மாள் தனியாக வசிக்கிறார். இன்று அதிகாலை 3 மணியளவில் தங்கம்மாள் வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து வாலிபர் ஒருவர் கொள்ளை அடிக்க முயன்றார். அந்த நபரின் கால் கூரையில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கம்மாள் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து வாலிபரை மடக்கி பிடித்தனர். அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து வாலிபரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் டி.பெருமாபாளையத்தை சேர்ந்த தியாகராஜன் (25) என்பது தெரிய வந்தது. அப்பகுதி மக்கள் அடித்ததில் தியாகராஜனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். தியாகராஜனிடம் இருந்த கைப்பையில் ஏடிஎம் கார்டு, பேங்க் பாஸ்புக், செக்புக், விசிட்டிங் கார்டு, ரூ.10 ஆயிரம் இருந்தது. அந்த பை நேற்றுமுன்தினம் அதே பகுதியை சேர்ந்த மில் அதிபர் வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, தியாகராஜனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.