காங். எம்எல்ஏவுக்கு அடி, உதை : கேரளாவில் 25 பேர் கைது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளாவில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோயில் உள்ளது. இங்கு வள்ள சத்யா நிகழ்ச்சி நேற்று நடந்தது. பத்தனம்திட்டா காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவதாசன் நாயர் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், அவரை அழைக்கக் கூடாது என ஆரன்முளா விமான நிலைய எதிர்ப்பு அமைப்பினர் கூறினர்.
ஆரன்முளா விமான நிலைய விவகாரத்தில் சிவதாசன் நாயர் எம்.எல்.ஏ. இரட்டை வேடம் போடுகிறார் என்றும், அவரை கோயில் விழாவில் பங்கேற்க விடமாட்டோம் என்றும் விமான நிலைய எதிர்ப்பு அமைப்பினர் தெரிவித்திருந்தனர். ஆனால், கோயில் நிர்வாகம் இதை ஏற்கவில்லை. நேற்று காலை 11 மணியளவில் வள்ள சத்யா நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக, சிவதாசன் நாயர் எம்.எல்.ஏ. வந்தார்.
திடீரென அங்கு வந்த விமான நிலைய எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்த 25 பேர், சிவதாசன் நாயர் எம்.எல்.ஏ.வின் சட்டையைப் பிடித்து இழுத்து தாக்கினர். இதில் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து, போலீசார் சிவதாசன் நாயரை பாதுகாப்பாக வெளியே அழைத்து சென்றனர். அவரை உடனடியாக கோழஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
எம்.எல்.ஏ.வை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி காங்கிரஸ் தொண்டர்கள் ஆரன்முளா போலீஸ் நிலையம் முன்பு செங்கணூர் பத்தனம்திட்டா ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் நிலையம் மீது கல்வீச்சும் நடத்தப்பட்டது. இது தொடர்பாக, 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவதாசன் நாயர் எம்.எல்.ஏ. தாக்கப்பட்டதை கண்டித்து பத்தனம்திட்டாவின் இன்று ‘பந்த்‘ நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.