சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு
கோவை: கோவை கே.ஜி மருத்துவமனை சார்பில் ‘கிரிட்டிக்கல் கேர்‘ என்னும் அவசர சிகிச்சை கருத்தரங்கு நேற்று நடந்தது. மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் தலைமை தாங்கி, பேசியதாவது: உடலில் சர்க்கரை நோய் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை. உணவு கட்டுப்பாடு மற்றும் நடைபயணம் சர்க்கரை நோய் வரவிடாமல் தடுக்கும். ஒருமுறை சர்க்கரை நோய் வந்துவிட்டால், முதல் மாரடைப்பு வந்துவிட்டது என அர்த்தம். நெஞ்சு வலி, தொடர் வாந்தி, வழக்கத்துக்கு மாறாக வியர்வை கொட்டுதல், வாயு தொல்லை போன்ற அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக்கொள்வது நல்லது. ஒருமுறை இசிஜி எடுத்தால் மட்டும் போதாது. பலமுறை பரிசோதிக்க வேண்டும். அமெரிக்காவில் மாரடைப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகம். அதைப்போல், நம் நாட்டிலும் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு வேண்டும். இதய இடதுபக்க ரத்தக்குழாய் அடைப்பு ஆபத்தானது. இது, 70 சதவீதம் பேரை சாய்த்து விடுகிறது. எனவே, முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால் மாரடைப்பை தடுக்கலாம். இவ்வாறு டாக்டர் பக்தவத்சலம் பேசினார்.