சென்னை: நடிகர் விஷாலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ‘விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து உள்ளது எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சில முஸ்லிம் அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்தது. இதையடுத்து படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதில் வேதனை அடைந்த கமல் நாட்டைவிட்டு வெளியேறப்போவதாக கூறினார். அவரது பேட்டியை டிவியில் பார்த்ததும் நடிகர், நடிகைகள் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இந்நிலையில் நடிகர் விஷால் டுவிட்டர் பக்கத்தில், ‘கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் ஆதரவாக நிற்காமல் மவுனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து நடிகர் சங்கம் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. நடிகர் சங்கத்துக்கு எதிராக கருத்து சொல்லி இருப்பது தவறானது. சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்து உங்களை ஏன் நீக்கக்கூடாது என்று விஷாலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து சங்க பொதுச் செயலாளர் ராதாரவி இன்று கூறும்போது, ‘கமல்ஹாசனுக்கு விஸ்வரூபம் படம் ரிலீஸ் செய்வதில் பிரச்னை ஏற்பட்ட போது அவருக்கு நடிகர் சங்கம் ஆதரவாக நின்றது. சரத்குமார், ராதிகா, நான், சிவகுமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கமல் அலுவலகத்துக்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினோம். தடையை நீக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கையும் வைத்தோம். ஆனால் நடிகர் சங்கம் மவுனமாக இருந்தது என்று விஷால் டுவிட்டரில் எழுதி இருப்பது கண்டிக்கத்தக்கது. சங்கத்தின் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமலும், சங்க கூட்டங்களின்போதும் அவர் பங்கேற்றது கிடையாது. நடிகர் சங்கம் கமலுக்கு ஆதரவு தெரிவித்ததுகூட தெரியாமல் கருத்து சொல்லி இருக்கிறார். இதையடுத்து 15 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்று சங்கம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.