பொங்கல் திருநாளையொட்டி தென் மாவட்டங்களில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. குறிப்பாக மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்க்க பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள். மாடுகளை துன்புறுத்துவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு தற்போது நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், கால்நடை மருத்துவ துறையில் முறையாக பதிவு செய்யப்படுகின்றன. அதன்பிறகு, சென்னை பிராணிகள் நலவாரிய சான்றிதழ் அவைகளுக்கு வழங்கப்படுகிறது. போட்டி தொடங்கும் முன்பு காளைகளுக்கு முறையாக ஊக்கமருந்து உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. எத்தனை காளைகள் வந்திருந்தாலும், பிற்பகல் 2 மணியளவில் போட்டி முடித்துக் கொள்ளப்படுகிறது. கால்நடை டாக்டர்கள் குழு, வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சையளிக்க டாக்டர்கள் குழு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் என எல்லாம் தயார் நிலையில் வைக்கப்படுகிறது. மாடுபிடி வீரர்களுக்கும், மாடுகளும் காயமடையாமல் இருக்க திடல் முழுவதும் தென்னை நார்கள் தூவி விடப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் ஒன்று விடாமல் பின்பற்றப்பட்டது.
மதுரை, அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று நடந்த ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்பட்ட 440 காளைகளில் நேரமின்மை காரணமாக 314 காளைகள் மட்டுமே பங்கேற்க முடிந்தது. 294 பேர் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். காளைகளை அடக்கும் முயற்சியில் ஐம்பது வீரர்கள் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 365 காளைகள் பங்கேற்றன. 321 வீரர்கள் கலந்து கொண்டனர். காளைகளை அடக்கியதில் வீரர்கள் 7 பேர் காயமடைந்தனர்.
உலகளவில் பிரபலமான அலங்காநல்லு£ர் ஜல்லிகட்டு இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள 600 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். 450 ஜல்லிக்கட்டு காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவனியாபுரம், பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் வீரர்களுக்கோ, காளைகளுக்கோ அதிகளவில் காயம் ஏற்படவில்லை. இதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முக்கிய காரணம் என்று சொல்லலாம். அதேபோல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் நடக்கும் என்று எதிர்பார்ப்போம். பாதுகாப்பான ஜல்லிக்கட்டை நடத்தி தமிழர்களின் வீர விளையாட்டை வென்றெடுப்போம்.