இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தற்கொலை படை தீவிரவாதி உள்பட 6 வெடிகுண்டுகள் வெடித்ததில், 103 பேர் உடல்சிதறி பரிதாபமாக பலியாயினர். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் அலம்தார் சாலை மற்றும் ஏர்போர்ட் சாலையில் நேற்று மாலை சக்திவாய்ந்த 2 வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. பாதுகாப்பு வாகனங்களை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 67 பேர் உடல்சிதறி பரிதாபமாக பலியாயினர். 160 பேர் படுகாயம் அடைந்தனர். அலம்தார் சாலையில் உள்ள ஸ்னூக்கர் விளையாட்டு கிளப்புக்குள் புகுந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன், தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான்.
இந்த கிளப்பு வளாகத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் 2 வழிபாட்டு தலம் உள்ளது. இந்த இடத்தை தகர்க்கும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டது. தகவல் அறிந்து மீட்புப் படையினரும் பத்திரிகையாளர்கள் கேமராமேன்களும் அங்கு விரைந்த போது, மீண்டும் அடுத்தடுத்து 3 வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதில் சமா டிவி கேமராமேன் இம்ரான் ஷேக், நிருபர் சயீப் உர்ரகுமான், போலீஸ் அதிகாரிகள் 2 பேர் மற்றும் மீட்புப் படையினர் பலர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் குவெட்டாவில் உள்ள பச்சாகான் சவுக் பகுதியில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 12 பேர் பலியாயினர் 40 பேர் காயம் அடைந்தனர். வெடிகுண்டு வெடித்த சத்தம் பல கி.மீ. தூரத்துக்கு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், Ôபாதுகாப்பு படை வீரர்களின் வாகனத்துக்கு அடியில் 20 கிலோ எடை கொண்ட டைம் பாம் பொருத்தி உள்ளனர்.
வெடிகுண்டு வெடித்து சிதறியதில் சிறுவர்கள் உள்பட பலர் இறந்துள்ளனர்Õ என்றனர். சில மணி நேரம் கழித்து ஸ்வாத் பள்ளத்தாக்கு அருகில் உள்ள மிங்கோரா என்ற இடத்தில் பிரார்த்தனை கூடத்திலும் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 22 பேர் பலியாயினர். 70 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் டீன் ஏஜ் பையன் ஒருவன் மனித வெடிகுண்டாக செயல்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல்களுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. மொத்தம் 6 இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 103 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook