பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தாய், மகள், குழந்தையை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்தது எப்படி என்பது குறித்து கைதான வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வேங்கடத்தனூரை சேர்ந்தவர் உசேன். சவுதியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மைமூன் பீவி(32). இவர்களது மகள் சாயினாபானு(இரண்டரை வயது). மைமூன் பீவி பெரம்பலூர் ரங்கா நகரில் உள்ள தனது தாய் ஆயிஷா கனியுடன்(53) வசித்து வந்தார். வேங்கடத்தனூரில் உள்ள தனது மாமியார் மதர்ஷாவை பார்க்க மைமூன் பீவி, தாய் ஆயிஷா கனி, குழந்தை சாயினா பானுவுடன் கடந்த 7ம் தேதி சென்றார். அன்று மாலையே அங்கிருந்து திரும்பியவர் வீடு வந்து சேரவில்லை. இதுபற்றி பெரம்பலூர் போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் அவர்கள் 3 பேரும் பெரம்பலூரை அடுத்த மேலப்புலியூர் அருகே உள்ள பொது கிணற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வேங்கடத்தனூரை சேர்ந்த மைமூன் பீவியின் உறவினர் மகன் ஜமாலுதீன்(24), அவரது தம்பி முகமது ரபீக்(18), இவர்களது நண்பர்கள் மணிகண்டன்(23), தினகரன்(18) ஆகியோரை கைது செய்தனர். ஜமாலுதீன் அளித்த வாக்குமூலம்: நானும், தினகரனும் செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தோம். எனது சித்தி மைமூன் பீவி அதிகளவில் நகை அணிந்து அடிக்கடி ஊருக்கு வருவார். இதனால் அவரை ஏமாற்றி நகைகளை பறிக்க நாங்கள் 4 பேரும் திட்டமிட்டோம். கடந்த 7ம் தேதி மைமூன் பீவி, தனது தாய் மற்றும் குழந்தையுடன் ஊருக்கு வந்தார். பின்னர் அவர்கள் மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.
அவர்களை ஊரில் விட்டு விடுவதாக கூறி எங்களுடைய ஆம்னி வேனில் ஏற்றிக் கொண்டோம். வேனை மணிகண்டன் ஓட்டினார். எனது தம்பி ரபீக், நண்பர் தினகரன் உடன் இருந்தனர். பெருமாள்மலை அடிவாரத்தை தாண்டி சிறிது தூரம் சென்றவுடன், நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து மைமூன் பீவி, ஆயிஷா கனி, குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றோம். பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகைகளை எடுத்துக் கொண்டோம். அந்த நகைகளை மணி என்பவரிடம் கொடுத்து, புதைத்து வைக்க ஏற்பாடு செய்தோம். பின்னர் சடலங்களை கிணற்றில் போட்டுவிட்டு சென்றுவிட்டோம். இவ்வாறு ஜமாலுதீன் வாக்குமூலம் அளித்துள்ளார். 4 பேரையும் போலீ சார், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மணியை தேடிவருகின்றனர். முகமது ரபீக்கும், தினகரனும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook