புதுச்சேரி: புதுவையில் ரியல் எஸ்டேட் புரோக்கர் நள்ளிரவு வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 4 பேர் கும்பலை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். புதுவை ரெட்டியார்பாளையம் ஜெஜெ நகர் 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் முரளி (47). திருமணமாகவில்லை. இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் முரளி தனது வீட்டின் எதிரே நின்றிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் இறங்கினர். பின்னர் முரளியிடம் தகராறு செய்து, அவரது தலை, உடலில் கத்தியால் சரமாரி வெட்டினர். முரளி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்ததும் அக்கும்பல் தப்பிஓடிவிட்டது.
சத்தம்கேட்டு ஓடிவந்த உறவினர்கள் முரளி சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முரளி உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் முரளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கொலை வழக்குபதிவு செய்த போலீசார், 2 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதம் 20ம் தேதி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி கொக்குபாபு வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கு முரளியின் தம்பி அலெக்சாண்டர் உடந்தையாக இருந்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்ட தம்பியை முரளி, சில மாதங்களில் ஜாமீனில் வெளியே எடுத்தார். இதற்கு பழிக்குப் பழியாக அலெக்சாண்டரை தீர்த்துக் கட்ட எதிர் கோஷ்டியினர் காத்திருந்தனர். அதற்காக நேற்றிரவு ஆயுதங்களுடன் அக்கும்பல் முரளி வீட்டின் அருகே பதுங்கியிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக முரளி வெளியே வந்ததால் தம்பியை ஜாமீன் எடுத்த ஆத்திரத்தில் அவரை வெட்டிச் சாய்த்துவிட்டு தலைமறைவானது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக, ரெட்டியார்பாளையம் ஜெஜெ நகரைச் சேர்ந்த சுரேஷ் (27), மணிபாலன் (28) மற்றும் 2 பேர் மீது கொலை வழக்குபதிந்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook