சென்னை ஆலந்தூரில் மெட்ரோ ரயில் பணியின் போது ராட்சத இரும்பு சிலாப் விழுந்து பீகார் வாலிபர் உடல் நசுங்கி இறந்தார். பணியின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததுதான் இந்த பரிதாப சம்பவத்துக்கு காரணம். சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. ஆலந்தூரில் கிண்டி கத்திப்பாராவில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையம் வரை இந்த பணி நடைபெறுகிறது. இதற்காக ரயில் நிலைய சாலையில் பில்லர் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. பரங்கிமலை சுரங்க பாதை படவேட்டம்மன் ஆலயம் அருகே உள்ள ஒரு பில்லரில் இருந்து மற்றொரு பில்லரை இணைப்பதற்காக ராட்சத கிரேன் மூலம் 400 டன் எடை கொண்ட இரும்பு சிலாப் பொருத்தும் பணி நடந்து வந்தது. 50க்கும் அதிகமான தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இரும்பு சிலாப் ஒன்றை கிரேன் மூலம் நகர்த்தி கொண்டே சென்றனர். அதை ஒரு பில்லரில் பொருத்தும் போது கிரேனின் பிடி விலகி பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது. அங்கு பணியில் இருந்த 3 பேர் சிலாப்பின் அடியில் சிக்கி அலறி துடித்தனர். சம்பவ இடத்திலேயே பீகாரை சேர்ந்த டிம்பிள் ஷா (24) என்பவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். சமீர்கான் (29), நந்தி பஸ்வான் (27) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் விசாரித்தனர். போதுமான பாதுகாப்பு வசதி இல்லாமல் கவனக்குறைவாக பணி நடந்துள்ளதும், அதிகாரிகள் பணியில் இல்லாததும் தெரியவந்தது.
அஜாக்கிரதையாக ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தியதாகவும், பணியாட்களை மரணம் ஏற்படும் விதத்தில் வேலை வாங்கியதாகவும் வழக்குப்பதிவு செய்த போலீசார், சைட் இன்ஜினியர்கள் மருதுபாண்டி, குல்தீப்சிங், பாதுகாப்பு பொறியாளர் விமல், பாதுகாப்பு மேற்பார்வையாளர் பிரஜீத் ஆகியோரை கைது செய்தனர். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு விஷயத்தில் எப்போதுமே அலட்சியம் காட்டப்பட்டு வருகிறது. 50 அடி உயரத்தில் நடக்கும் இந்த பணிகளுக்கு சரியான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை. இரவு பணி நடக்கும் இடத்தில் விளக்குகள் கூட இல்லை. இருட்டிலேயே பணிகள் நடந்துள்ளன. ஏற்கனவே சென்னையில் கீழ்பாக்கம், வடபழனி, கோயம்பேடு ஆகிய இடங்களில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆனாலும் அலட்சியம் தொடர்கிறது. இறந்து போனதற்கு நஷ்ட ஈடு கொடுக்கலாம். உயிரை மீட்டுத் தர முடியுமா?
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook