500 தியேட்டர்களில் ஜன. 25ம் தேதி விஸ்வரூபம் ரிலீஸ் : கமல் அறிவிப்பு
சென்னை: ‘விஸ்வரூபம் படம் ஜன. 25ம் தேதி 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘விஸ்வரூபம். இப்படத்தை இன்று இரவு டிடிஹெச்சிலும், நாளை தியேட்டரிலும் ரிலீஸ் செய்யப்போவதாக கூறி இருந்தார் கமல். டிடிஹெச்சில் ஒளிபரப்புவதற்கு திரை அரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. டிடிஹெச்சில் படத்தை திரையிட்டால் பொது இடத்தில் ஸ்கிரீன் அமைத்து விஸ்வரூபம் படத்தை திரையிடுவோம் என்று சிலர் கூறினர். இது பற்றியும், தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுவதாகவும் சமீபத்தில் போலீஸ் அதிகாரியிடம் நேரில் புகார் அளித்தார் கமல்ஹாசன்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தியேட்டர் அதிபர்கள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இதையடுத்து விஸ்வரூபம் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக கமல் நேற்று அறிவித்தார். பட ரிலீஸ் தேதியை பின்னர் அறிவிப்பதாகவும் கூறினார். அதன்படி கமல் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘திரை அரங்கு உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி 25ம் தேதி 500 அரங்குகளுக்கு குறையாமல் தமிழகமெங்கும் விஸ்வரூபம் திரையிடப்படும். என் தொலை நோக்கு பார்வையை புரிந்துகொண்டு டிடிஹெச் என்னும் புதிய முயற்சிக்கு துணை நிற்க தயாரான திரை அரங்கு உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்த சகோதரர்களுக்கு மனமார்ந்த நன்றி. தனிமனிதனை மதித்து ஒருங்கிணைந்த அனைவருக்கும் நன்றி என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.