புதுடெல்லி: சிபிஐ இயக்குனர் நியமன விவகாரத்தில் பாஜவை விமர்சித்த ராம் ஜெத்மலானி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜ தெரிவித்துள்ளது. லோக்பால் குறித்த மாநிலங்களவை தேர்வு கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில், சிபிஐ இயக்குனரை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய கூட்டு குழுவினர் தேர்வு செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது. இந்நிலையில், சிபிஐ இயக்குனராக ரஞ்சித் சின்காவை மத்திய அரசு நியமித்துள்ளது. கூட்டு குழு ஆலோசனை நடத்தாமல் சிபிஐ இயக்குனர் தேர்வு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவி த்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் அனுப்பினர். ஆனால் இந்த கோரிக்கையை பிரதமர் நிராகரித்து விட்டார். இந்நிலையில், சிபிஐ இயக்குனர் நியமனத்தை பாஜ எதிர்ப்பதை அக்கட்சி மூத்த தலைவரும் எம்பியுமான ராம் ஜெத்மலானி கடுமையாக விமர்சித்தார். ‘சிபிஐ இயக்குனராக ரஞ்சித் சின்காவை அவசர அவசரமாக காங்கிரஸ் நியமனம் செய்ததாக கூறி பாஜ கண்டனம் தெரிவித்தது ஆச்சரியம் அளிக்கிறது. வேறொருவரை நியமிப்பதன் மூலம் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை என்று ஜெத்மலானி கூறினார். ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நிதின் கட்கரியை பாஜ தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் கட்சியை விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாஜ செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறுகையில், ‘பாஜ தலைவர் நிதின் கட்கரிக்கு எதிராக ராம் ஜெத்மலானி பேசி வருகிறார். தற்போது சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்து பேசியுள்ளார். அவரது குற்றச்சாட்டுகளை கட்சி முற்றிலும் நிராகரிக்கிறது. சரியான நேரத்தில் ராம் ஜெத்மலானி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்றார்.