கேர்ள் பிரெண்டும் செல்போனும் விபத்துகள் அதிகரிக்க காரணம் : சட்டீஸ்கர் முதல்வர் பேச்சு
ராய்ப்பூர்: ‘கேர்ள்பிரண்ட், பைக், செல்போன்தான் விபத்துகள் அதிகரிக்க காரணம் என சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டம் தெரிவித்துள்ளன. சட்டீஸ்கர் முதல்வர் ராமன்சிங், ராய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியது: மாநிலத்தில் நடக்கும் விபத்துகளில் இறப்பவர்களில் 55 முதல் 60 சதவீதம் பேர் இளைஞர்களாவே உள்ளனர். ஒரு நல்ல பைக், நல்ல மொபைல், நல்ல கேர்ள்பிரண்ட். இந்த மூன்றும் இருந்தால் விபத்துகள் அதிகரிக்கத்தான் செய்யும். இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது இளைஞர்கள் செல்போன் பேசியபடி செல்வதை பார்ப்பது வழக்கமான காட்சியாகிவிட்டது. செல்போன் பேசிக் கொண்டு பைக் ஓட்டி விபத்துக்கு ஆளாகிறார்கள். அந்த பழக்கத்தை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு ராமன் சிங் பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரவீந்திர சவுபே கூறுகையில், மாநிலத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்க முடியாமல் மாநில அரசு தோல்வியை தழுவி விட்டது. மோசமான சாலைகள் மற்றும் போக்குவரத்து துறையில் நடைபெற்றுள்ள ஊழல் ஆகியவையே விபத்துகளுக்கு முக்கிய காரணங்கள். ஆனால் மக்களை திசை திருப்பும் விதமாக ராமன் சிங் பேசியுள்ளார் என்றார்.