‘விஸ்வரூபம்’ படத்துக்கு 3 ஆயிரம் பிரின்ட்
சென்னை: ‘விஸ்வரூபம் படத்துக்கு 3 ஆயிரம் பிரின்ட் போடுவதாக கூறினார் கமல். கமல்ஹாசன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையடுத்து அவர் கூறியதாவது: விஸ்வரூபம் படம் ஆசியாவிலேயே முதல் முறையாக ஆர் ஓ தொழில்நுட்பத்தில் வெளிவருகிறது. ஸ்டிரியோவில் இரு பக்கவாட்டில் ஒலி கேட்கும். புதிய தொழில்நுட்பத்தில் தலைக்கு மேலிருந்தும் ஸ்பீக்கரில் ஒலி கேட்கும். தற்போது சத்யம் தியேட்டரில் இந்த தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்படம் வெளிவருவதற்குள் தமிழ்நாட்டில் 30 தியேட்டர்களிலாவது இந்த தொழில்நுட்பம் வந்துவிடும். தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் படம் வெளியாக உள்ளது. அதற்கான பணி நடக்கிறது. எனவே ரிலீஸ் தேதி நிர்ணயிக்கவில்லை. மொத்தம் 3 ஆயிரம் பிரின்ட்கள் போடப்படுகின்றன. இப்பணி முடிந்தபிறகுதான் ஹாலிவுட் பட பணி தொடங்க உள்ளேன். அதற்கும் நானே கதை எழுதுகிறேன். விஸ்வரூபம் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. முடிவானதும் அதை பற்றி அறிவிப்பேன். இந்த படத்தை புரிந்து கொள்ள கொஞ்சம் பொது அறிவும் உலக ஞானமும் வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.