லாஸ்ஏஞ்சல்ஸ்: கரன்ட் பில் கட்ட முடியவில்லை, கேபிளுக்கு பணம் கட்டவில்லை. அதனால் வயரை பிடுங்கி விட்டார்கள். வீட்டில் கஷ்டம். ஐந்து மாதமாக சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலை. ஜூலி செர்வீரா (69) என்ற அமெரிக்க பாட்டியின் நிலைமை இதுதான். ஆனால், 5 மாதத்துக்கு முன்பு அவர் கோடீஸ்வரியாகி விட்டார் என்பது இப்போது பரபரப்பாகி உள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசிப்பவர் ஜூலி செர்வீரா (69). கணவன் இறந்த பிறகு குழந்தைகளை வளர்க்க படாத பாடுபட்டார். ஓராண்டாக இவருக்கு சோதனை மேல் சோதனை. இவரது மகன் ரூடி (47) கடந்த ஆண்டு விபத்தில் இறந்துவிட்டார். அவருடைய 4 டீன்ஏஜ் மகன்களையும் வளர்க்கும் பொறுப்பும் சேர்ந்துகொண்டது. மேலும், திருமணமான 3 மகள்கள். பேர குழந்தைகள் என பெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பால் திணறினார் ஜூலி பாட்டி. கடந்த 5 மாதமாக கடும் பண நெருக்கடி. கரன்ட் பில் கட்ட பணம் இல்லை. கேபிளுக்கு பணம் கொடுக்காததால், வயரை பிடுங்கி சென்றுவிட்டார்கள். ஆனால், அதிர்ஷ்ட தேவதை கடந்த மே மாதமே ஜூலியை கோடீஸ்வரியாக்கி விட்டது என்பதுதான் அவருக்கு தெரியவில்லை. மகள் சார்லினா மார்க்கசுடன் கடந்த மே மாதம் ஷாப்பிங் சென்றிருந்தார் ஜூலி. பர்சில் இருந்த சில்லரை காசுகளை திரட்டி மகளிடம் கொடுத்த ஜூலி, வாட்டர் பாட்டில் வாங்கி வர சொன்னார். அப்படியே ஒரு லாட்டரி சீட்டும் வாங்கிவர சொன்னார். தண்ணீர் வாங்கவே காசு இல்லை. இதுல லாட்டரி டிக்கெட் வேறயா என்று கடுப்பான மகள் வேண்டா வெறுப்பாக ஒரு சூப்பர் லோட்டோ பிளஸ் டிக்கெட் வாங்கினார். அதை கார் பாக்சில் வைத்ததோடு அதுபற்றி மறந்துபோனார் ஜூலி. அந்த டிக்கெட்டுக்குதான் முதல் பரிசு 23 மில்லியன் டாலர் (ரூ.123 கோடி) விழுந்திருந்தது. டிக்கெட் வாங்கியவர் 6 மாதத்துக்குள் (நவம்பர் 26,ம் தேதி) பரிசு தொகையை வாங்காவிட்டால் பரிசு தொகை முழுவதும் பள்ளி நலத்திட்டங்களுக்கு போய்விடும் என்பது விதிமுறை. இதனால், லாட்டரி சீட்டு கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து, டிக்கெட் வாங்கியவரை லாட்டரி நிறுவன அதிகாரிகள் கடந்த 5 மாதமாக தேடினர். கேமராவில் பதிவான உருவத்தை அச்சிட்டு பல பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டினர். அதை ஜூலி பாட்டியின் இன்னொரு மகள் கடந்த வியாழனன்று பார்த்துவிட்டார். அம்மா ஜூலியிடம் தகவல் சொன்னார். முதல் பரிசு விழுந்ததை அவர்களால் நம்பவே முடியவில்லை. காரில் வைத்த லாட்டரி சீட்டை ஜூலி பாட்டி தேடி கண்டுபிடித்தார். உடனடியாக அதிகாரிகளை சந்தித்து லாட்டரி சீட்டை கொடுத்தார். ஆனந்த அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்த ஜூலி பாட்டி கூறுகையில், விபத்தில் இறந்த மகன் ரூடி மீண்டும் கிடைத்தால், இந்த பணம் முழுவதையும் கொடுத்து விடுவேன் என்று கூறி அழுதார். மகள்கள் அவரை தேற்றினர். மூன்று மகள்கள், 6 பேரக் குழந்தைகள் இருந்தும், மனநிலை பாதிக்கப்பட்ட 5 வயது மற்றும் 7 வயதுள்ள 2 ஆண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஜூலி. அவருடைய நல்ல உள்ளத்தை லாட்டரி அதிகாரிகளும் பாராட்டி பரிசு தொகை வழங்கினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook